சென்னை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தி, விழா மலரையும் வெளியிட்டார்.
விழாவில் பங்கேற்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்ற கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள்
மற்றும் பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்த தொண்டர்கள்
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாய்...
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் தீரன் சின்னமலை. சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் ‘‘இடையே ஒரு சின்னமலை’’ என்று போற்றப்பட்டவராய், தீரத்துடன் செயல்பட்டு ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றி நினைவு கூறும் வகையிலும், அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலை அமைத்தல், மணி மண்டபம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கிண்டியில் உள்ள சிலை புனரமைப்பு
சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து, தற்போது 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டதுடன் அதன் சுற்றுப்பகுதியின் பாதுகாப்புக்கு அலங்கார கிரில், மதில்சுவர் அமைக்கப்பட்டு தரையில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
மலர்தூவி மரியாதை
மேலும், தீரன் சின்னமலையின் 258–வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தீரன் சின்னமலை பேரவை சார்பாக தொகுக்கப்பட்ட தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா மலரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட, சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான உ.தனியரசு பெற்றுக்கொண்டார்.
அமைச்சர்கள்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தாமோதரன் உள்பட அமைச்சர்கள், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செந்தமிழன், மகளிர் மேம்பாட்டு ஆணைய தலைவி டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தீரன் சின்னமலை சிலைக்கு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு
கிண்டி மேம்பாலத்தில் இருந்து ஏறக்குறைய 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, அ.தி.மு.க., கொங்கு இளைஞர் பேரவை கொடிகளும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று மிகப்பெரிய தட்டிகளும் வைக்கப்பட்டு இருந்தது. சாலையின் இருபுறமும், கொங்கு இளைஞர் பேரவை கொடியை கையில் உயர்த்திப்பிடித்தவாறு, கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள் ஏராளமானோர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக காத்திருந்தார்கள். விழா நடைபெற்ற இடத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வந்ததும், அங்கு திரண்டிருந்த கொங்கு இளைஞர் பேரவையினர் விண்அதிர வாழ்த்துமுழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றார்கள்.
விழாவில் பங்கேற்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்ற கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள்
மற்றும் பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்த தொண்டர்கள்
மலர்தூவி மரியாதை