புதிய தலைமுறை மீதான வழக்குகளைத் திரும்பப்பெற சட்டப்பேரவையில் நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன் என கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தாராபுரத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, “மிகச்சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோவை வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் வேண்டுமென்றே குழப்பத்தை உண்டு பண்ணியவர்களை விடுத்து, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், அதன் செய்தியாளர் மீதும் வழக்கு புனைந்திருப்பது தவறு. வழக்குகளைத் திரும்பப்பெற நாளை நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்வில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன்” என தெரிவித்துள்ளார்.