சேலம்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு
செவ்வாய்க்கிழமை, 30, நவம்பர் 2010 (18:54 IST)
சேலம் அருகே விமான நிலைய விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
சேலம் அருகே கமலாபுரத்தில் அமைந்துள்ள விமான நிலைய விரிவாக்கத்துக்காக சின்னம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு இளைஞர் பேரவை மாநில செயலாளர் தனியரசு, விளை நிலங்களை கையகப்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழப்பார்கள். விமான நிலைய விரிவாக்கம் என்ற திட்டத்தை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இத்திட்டத்தினை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.