தினமலர் – தி, 2011 அக். 31
ப.வேலூர்: ""தீயணைப்பு நிலையம், ராஜா வாய்க்கால் ரீ மாடலிங், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று எம்.எல்.ஏ., தனியரசு கூறினார். ப.வேலூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மனுக்கள் வாங்கும் முகாம் நடந்தது. அப்போது, எம்.எல்.ஏ., தனியரசு, மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கினர். அதில், 20க்கும் அதிகமான மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரிடம் அளித்த மனுக்களில் கல்விக்கடன், மின்சாரம், சாலை, குடிநீர் வசதி செய்துதரக்கோரியும், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் குவிந்தன.
கடந்த பல ஆண்டுகளாக டி.கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததை தொடர்ந்து, மின் வசதி இல்லாமல் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். தகவல் அறிந்த எம்.எல்.ஏ., தனியரசு, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுத்தார். மானத்தியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜி (30), மூன்று சக்கர வண்டி கேட்டு மனு அளித்தார். அவருக்கு உடனடியாக மூன்று சக்கர வண்டி வழங்கப்பட்டது. அதேபோல், மருத்துவ சிகிச்சை கோரி மனு அளித்த வில்லிபாளையம் நல்லுசாமி, ப.வேலூர் சண்முகம், பெரியமணலி கண்ணன் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
எம்.எல்.ஏ., தனியரசு கூறுகையில், ""ப.வேலூர் சட்டசபை தொகுதியில் உதவியாளர்கள் மூலம், 24 மணி நேரமும் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம், ராஜா வாய்க்கால் ரீமாடலிங், வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுப்படும்,'' என, தெரிவித்தார்.
Thanks For,