விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு: உ. தனியரசு
First Published : 08 Jul 2010 11:38:12 AM IST
கரூர், ஜூலை 7: ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி. விகிதாசார அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றார் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் உ. தனியரசு.
பேரவையின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் க.பரமத்தியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ச. மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் த. கார்வேந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மகளிரணிச் செயலர் செல்வி, நிர்வாகிகள் ரவி, பழ.ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பாளர் உ. தனியரசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகையில், இன்று இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். அந்த விகிதாசார அடிப்படையில் வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் கள்ளை மதுபான பட்டியலிருந்து நீக்கி கள் இறக்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். தமிழக்தில் தீண்டாமை வன்கொடுமை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தைப் பாதிக்கும் மின் தட்டுப்பாடு, நூல் விலையேற்றம் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மாநில செயற்குழு உறுப்பினர் திருவோணம் கந்தசாமி நன்றி கூறினார்.