ஆகஸ்ட் 12,2011,21:25 தினமலர் முதல்பக்கம் அரசியல்செய்தி
சென்னை : ""காங்கிரஸ் ஒரு கட்சியே கிடையாது'' என்று, கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர், தனியரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டசபையில் இருந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் ஆவேசமாகப் பேசினார். முதல்வர் பேசி முடித்ததும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், முதல்வர் கருத்தை வரவேற்றும், மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதில், கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு பேசும் போது,"மத்தியில் நடப்பது மன்மோகன் அரசு; சோனியா அரசு; ராகுல் அரசு; அது ஒரு அரசும் கிடையாது; அது ஒரு கட்சியும் கிடையாது' என்றார். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆவேசம் அடைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். தனியரசு கருத்துக்குப் பதிலளிக்க, வாய்ப்புத் தருமாறும், அவர் தெரிவித்த கருத்துக்களை சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் வலியுறுத்தினார்.
இதற்கு,"சபைக் குறிப்பிலிருந்து, நீக்க வேண்டிய அளவிற்கு, உறுப்பினர் பேசவில்லை' என்று, சபாநாயகர் ஜெயக்குமார் தெரிவித்தார். "காங்கிரஸ் கட்சி, கட்சியே கிடையாது என்று கூறினார். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கட்சி தான் காங்கிரஸ்' என்று, ரங்கராஜன் தெரிவித்தார்.
அதற்கு,"நான் கூறியது சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சியை அல்ல; சோனியா காங்கிரசைத் தான் குறிப்பிட்டேன்' என, தனியரசு கூறினார். இதற்குப் பதிலளிக்க சபாநாயகர் அனுமதி தராததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
